சனி, 17 ஆகஸ்ட், 2013

வருகிறார் மீண்டுமொரு நீதிமான் ( Madras Cafe)

மெட்ராஸ் கபே என்ற பெயரில் ஜான் ஆப்ரகாம் நடித்து தயாரித்துள்ள இந்தி திரைப்படம் ஆகஸ்ட் 23 ம் தேதி வெளிவர உள்ள நிலையில், தமிழ் நாட்டிலுள்ள பல இயக்கங்கள் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையை பிண்ணனியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள  இத்திரைப்படம் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இதுபோல எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் தமிழகத்தில் விடுதலைபுலிகளுக்கான ஆதரவையோ, தனி ஈழத்துக்கான ஆதரவையோ துளியும் பாதிக்காது என்றாலும் வட இந்தியாவிலும் மற்றும் உலகெங்கும் வசிக்கும் கோடிக்கணக்கான இந்தி மொழி பேசும் மக்களிடம் தவறான அரைகுறை புரிதலை உருவாக்கும் என்பது கவலை அளிக்கிறது.வட இந்திய ஊடகங்கள்,அரசியல் தலைவர்கள் மற்றும் கலைத்துறையினர் என அனைவரும் தமிழ் மக்களின் உணர்வுகளை சிறிதும் புரிந்து கொள்ளாதது மட்டுமின்றி தொடர்ந்து தமிழ் உணர்வுகளை புண்படுத்துவது பெரும் ஆபத்திற்கு இட்டுச் செல்லலாம். தேச நலன் தேச ஒற்றுமை பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல பணம் ஈட்டுவதையே குறிக்கோளாக கொண்ட இந்த கும்பல்களுக்கும் மும்பை நிழலுலக தீவிரவாதிகளுக்கும் இருக்கும் தொடர்பு ஊரறிந்த ரகசியம்.இவர்கள் இந்தியாவைக் காக்கும் தியாகிகளாம், தமிழர்கள் தீவிர வாதிகளாம், நல்ல கற்பனைதான். இந்த நீதிமான்கள் ராஜீவ் கொலையால் அதிகம் ஆதாயமடைந்தது யார் என்பதையும் பதிவு செய்தால் இவர்களை பாராட்டலாம்.ஒட்டுமொத்த உலகும் இனப்படுகொலைக்காக இலங்கையை கண்டித்த போது கொழும்பு நகரில் இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுடன் கலை வளர்த்த அறிவு ஜீவிகளல்லவா இவர்கள்! தமிழில் தயாரிக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கை படத்திற்கு ஏற்பட்ட தடங்கல்களும் இடைஞ்சல்களும் மெட்ராஸ் கபே வுக்கு ஏற்படாதது இந்த படம் ஒரு அரைவேக்காட்டு அதிமேதாவித்தன பிதற்றல் தானோ என்ற சந்தேகத்தை அதிகரிக்கிறது. காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக